நாளை முதல் நாடு முழுவதும் QR கட்டண முறைமை
இலங்கையின் நிதிப் பரிமாற்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், 'தேசிய QR கட்டண முறைமை' (National QR Payment Adoption) நாளை (06) முதல் நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்தத் தேசிய திட்டத்தின் ஆரம்ப விழா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ளது.
பொருளாதார வினைத்திறனை அதிகரித்தல், நிதிச் சேவைகளை அனைவருக்குமானதாக மாற்றுதல் (Financial Inclusion) மற்றும் நிதிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை அரசாங்கம் தனது தேசிய முன்னுரிமைப் பணிகளாக அடையாளப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த டிஜிட்டல் கட்டண முறைமை ஊக்குவிக்கப்படுகிறது.
தினசரி சில்லறை வியாபார நடவடிக்கைகளில் அதிகளவில் பண நோட்டுகளைப் (Cash) பயன்படுத்துவது நிதி வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதுடன், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய QR முறைமை அறிமுகத்தின் மூலம், பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன முறையில் தமது பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.