கிளிநொச்சி பொலிஸ் காவலரண் மீது தாக்குதல்!
கவனக்குறைவாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதால், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கிளிநொச்சி - பரந்தன் வீதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (18) கிளிநொச்சி - பரந்தன் வீதியில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பியோடியவர் தாக்குதல்
இதன்போது கவனக்குறைவாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.எனினும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் காவலரணைக்கு சென்ற இந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.