வளைகுடாவில் பதற்றம் ; ஈரான் உயர்மட்டத் தளபதிகள் கூட்டத்தில் தாக்குதல்... 15 பேர் பேர் பலி
மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று (24) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஈராக்கின் 'ஹாஷத் அல்-ஷாபி' என அழைக்கப்படும் மக்கள் அணிதிரட்டல் படைகளின் அன்பார் மாகாண நடவடிக்கைகளுக்கான தளபதி சாத் அல்-பைஜி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட கூட்டம்
அத்தோடு அவருடன் மேலும் 14 போராளிகளும் உயிரிழந்துள்ளனர். உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவே நடத்தியுள்ளதாக ஈரான் ஆதரவுப் படைகளின் அமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
"எமது வீரர்கள் கடமையில் இருந்தபோது அமெரிக்க வான்படை திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரைத் தொடர்ந்து, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் விரிவடைவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் எல்லைகளைக் கடந்து, தற்போது லெபனான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் ஆட்கொண்டுள்ளமை சர்வதேச ரீதியாக பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
அதேவேளை ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.