கொழும்பில் மலைப்பாம்புடன் நடனம்; யுவதியை தேடும் அதிகாரிகள்
கொழும்பில் நடைபெற்ற விழாவின் போது, இளம் பெண் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நடனமாடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டார்.

கைது செய்வதற்கு பிடியாணை
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கொழும்பில் ஆடை அலங்காரக் கலைஞர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், 'மெத்மி ஹிரண்யா' என்ற பெண் ஊர்வன வகையைச் சேர்ந்த மலைப்பாம்பை தனது கழுத்தில் சுற்றியவாறு, நடனமாடியதாக வனவிலங்கு திணைக்கள விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு சந்தேக நபருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனைச் செய்யத் தவறியதுடன் தற்போது தலைமறைவாக உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, அவரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆடை அலங்காரக் கலைஞர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இந்த சம்பவத்தை காணொளி எடுத்த ஒளிப்பதிவாளர் ஆகியோரிடமிருந்து வாக்கு மூலங்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.
இதற்கமைய, குறித்த இருவரும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள விசாரணை அதிகாரிகளிடம் சென்று வாக்குமூலம் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.