மாநகர சபை ஒன்றின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் ; வலுக்கும் கண்டனங்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உலுவதடுகே சந்தமாலி மீது தாக்குதல் நடத்தியமைக்கு அந்த கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சிலரின் தாக்குதலால் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உலுவதடுகே சந்தமாலியின் உடல்நலன் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சித் தவிசாளர் வஜிர அபேவர்தன வைத்தியசாலை சென்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொடூரமான தாக்குதல்
இத்தகைய கொடூரமான தாக்குதல்களை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (16) கொழும்பு மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தொடக்க அமர்வில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது சந்தமாலி அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.