கொழும்பில் வயதான தம்பதி மீது தாக்குதல்; போதைப்பொருள் காரணமா?
கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் செப்டெம்பர் 09 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 68 வயதுடைய வயோதிப தம்பதியே இவ்வாறு காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகன் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரே தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் தாக்குதலில் காயமடைந்த வயோதிப தம்பதி போதைப்பொருள் கடத்தல் அல்லது வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வயோதிப தம்பதியின் மகன் முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.