தாக்குதல் இடம்பெறலாம்; ஜனாதிபதிக்கு சென்ற விசேட கடிதம்!
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலைப் போல மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியம் நாட்டிற்குள் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பின் பொதுச்செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.
குறித்த கடிதத்திலேயே மேற்படி எச்சரிக்கையை அவர் விடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிவில் மற்றும் நபர்களின் ஊடாக பாதுகாப்பு பிரிவை அதைரியப்படுத்தும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.
மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு முன்பாக இருக்கின்றதாகவும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்கதாக பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் செயற்படுகின்ற மேலும் சில அடிப்படைவாத மற்றும் இனவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.