எனக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது: றிஷாத் பதியுதீன்
எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு நபருக்கும் வந்துவிடக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்ப்னருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை றிஷாத் , சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகள் பல திட்டமிட்டு செய்யப்பட்டது.
குண்டு வெடித்த தினத்தில் இருந்து அந்த குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பலரும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்க்ள அறிவார்கள். எந்த பயங்கரவாதத்தோடும் அணுவளவும் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள்.
இந்த விடயத்தினை தெளிவாக சொன்னோம். கட்நத நல்லாட்சியில் விசாரணை இடம்பெற்றபோது அமைச்சு பதவயை விலகுமாறு அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருக்க அவர் மரணித்து விடுவார் விலகுங்கள் என்று பல அழுத்தங்கள் கொடுக்க அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகி நியாயமான விசாரணைக்கு வழி கொடுத்தோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது என்னை மூன்று முறை அழைத்து புலனாய்வினர் விசாரித்தார்கள். அவர்களிடம் நான் உண்மையான பதிலை வழங்கிய பொழுதும் சாதாரண நபருக்கு நடக்கூடாத அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டவனாக எனது மனைவி பிள்ளைகள் உறங்கிய அறைக்குள் பலவந்தமாக வந்தார்கள்.
அதோடு எனது கதவு மூடிக் காணப்பட்ட நிலையில் மதிலால் பாய்ந்து உள்ளே வந்து ஒரு பெரிய மாபியா தலைவரை கைது செய்வது போன்று நடந்து கொண்டார்கள். அதன் பின்னர் ஆறு மாதம் சிறையில் இருந்தேன்.
இந்த நிலைமை யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக கடந்த காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு கீழே கைது செய்த வரலாறு கிடையாது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.
நாட்டில் எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், எமது பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் இங்கு இருக்கின்றது. அவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.