பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
அதுருகிரியவில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மேல் மாகாணம் தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன ஆகியோரை எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன, சம்பவம் தொடர்பில் அமைச்சர் டிரான் அலஸிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.