பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட மகாளய பட்சம் வழிபாடு
ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என குறிப்பிடப்படுகிறது.
இவை முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலகட்டமாகும். மகாளய பட்சத்தின் சிறப்புகள் என்ன, இந்த கால கட்டத்தில் என்ன செய்தால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்து வழிபடுவதற்கும், முன்னோரின் பெயரால் தானம் செய்து வழிபடுவதற்கும் ஏற்ற சிறப்பான காலமாக நம்பப்படுகிறது.
வழக்கமாக அமாவாசைகளில் நாம் யாருடைய பெயரை சொல்லி தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே போய் சேரும். ஆனால் மகாளய பட்சத்தில் நாம் அளிக்கும் தர்ப்பணம், நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என சொல்லப்படுகிறது.
அதே போல் இந்த காலகட்டத்தில் அளிக்கப்படும் தானங்களை நம்முடைய முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்று, நமக்கு ஆசி வழங்குவதாகவும் ஐதீகம். அதனால் தான் மகாளய பட்சம் மிகவும் முக்கியமான காலமாக குறிப்பிடப்படுகிறது.
இந்த 15 நாட்களும் நாம் செய்யும் வழிபாடுகளால் பித்ரு தோஷத்தில் இருந்து மீண்டும், முன்னோர்களின் ஆசிகளை முழுவதுமாக பெற முடியும்.
மகாளய பட்சம் என்பது புராட்டாசி மாத அமாவாசைக்குமுந்தைய 15 நாட்களை குறிப்பதாகும். இந்த நாட்களில் செய்யப்படும் முன்னோர் வழிபாடு குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், சுப காரிய தடைகள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றை போக்கி, சுபிட்சத்தை உண்டாக்கும். மகாளய பட்சத்தில் மட்டும் தெரியாதவர்களுக்கும், இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
இந்த ஆண்டு செப்டம்பர் 08ம் திகதி திங்கட் கிழமை மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. செப்டம்பர் 21ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மகாளய அமாவாசை வருகிறது.
ஒரு வருடத்தில் வரக் கூடிய மிக முக்கியமான அமாவாசைகளில் மகாளய அமாவாசையும் ஒன்று. அதோடு இந்த ஆண்டு மகாளய பட்சம் திங்கட்கிழமையில் துவங்குவதும், மகாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமானதாகும்.
திங்கட்கிழமை என்பது சந்திரனுக்குரிய நாள். சந்திரன், தாய் வழி உறவுகளுக்கான கிரகம் ஆகும். அதே போல் ஞாயிற்றுக் கிழமைக்கு அதிபதியான சூரியன் தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகம் ஆவார்.
அதனால் இந்த ஆண்டு மகாளய பட்சத்தில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவதும், முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் போன்றவற்றை கொடுப்பதும் தாய் மற்றும் தந்தை வழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் ஆகியவற்றை நீக்க உதவும்.
மகாளய பட்சம் காலத்தில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது, நாய்கள், காகங்கள் ஆகியவற்றிற்கு உணவு அளிப்பது, ஏழைகளுக்கு, வயதில் முதியவர்களுக்கு உணவளித்து பரிமாரிப்பது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது ஆகியவை மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களுமே முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஒரு வருடத்தில் கொடுக்க வேண்டிய 96 தர்ப்பணங்களில் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் கொடுக்கும் தர்ப்பணமும் அடங்கும்.
தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளை போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையிலும், அதற்கு முந்தைய 15 நாட்களும் முன்னோர்களுக்காக வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து வழிபடுவது நல்லது.