இலங்கை மக்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!
உலகில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சைச் சேவைகளைப் பெற முனைவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை ஒருவர் ஆண்டிற்கு 6 தடவைகள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாத்தளை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளின் கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.
முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடுகளில் நாமும் ஒன்று. அது தொடர்பிலும் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலப்படுத்தப்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைக்கலாம் எனவும் சிகிச்சை காலத்தை அதிகரிப்பதன் ஊடாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
பிற்பகல் 4 மணியின் பின்னர் சிறு நோய்களுக்கும் வைத்தியசாலையில் அனுமதிப்பதன் ஊடாக செலவும் அதிகரிப்பதாக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுட்டிக்காட்டினார்.