மறைந்த நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா!
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை ஆர்யா நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மறைந்த நடிகர் விவேக் தனது நகைச்சுவை காட்சிகளின் மூலம் சமூக கருத்துக்களை தெரிவித்து வந்ததுடன், மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அக்டோபர் 15 அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் ஆர்யா மரங்கள் நட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாமின் பிறந்த நாளின் முன்னிட்டு நடிகர் விவேக் தன்னுடன் இணைந்து மரங்கள் நட என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்.
எனினும் எதிர்பாராத விதமாக இன்று அவர் நம்மிடம் இல்லை. எனவே அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன் என ஆர்யா கூறியுள்ளார்.
நடிகர் விவேக் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்த அரண்மனை 3 அக்டோபர் 14 வெளியாகியிருந்த நிலையில் நடிகர் விவேக்கின் கடைசி படமாக இந்தப் படம் அமைந்தது.
இந்நிலையில் அரண்மனை 3 இல் நடிகர் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.