பெண் ஒருவரை மோசடி செய்த நில்மினி கைது!
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்த நில்மினி என்ற பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடன் 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று, ஏமாற்றியதாக பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
பணியகம் விடுத்த கோரிக்கை
குறித்த பெண்ணை பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர் பணியக சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் இன்று (13) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இதனடிப்படையில் வெளியாட்கள் எவரும் இதில் தலையிட முடியாது எனவும், வேலை வழங்க முடியும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோருகின்றது.
மேலும், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk அல்லது 1989 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் தகவல்களைப் பெறுமாறும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.