வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திய இருவர் கைது!
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - மடுக்கந்தை பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி நேற்று (16.11.2023) காலை 5 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனையினை முன்னெடுத்தனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த விசேட அதிரடிபடையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அத்துடன் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், அவற்றை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.