புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு!
இலங்கையில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த விளையாட்டு நிகழ்வுகள் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) காலை, முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட வைத்தியர்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.