யாழ்.காரைநகரில் தனியார் காணிகளை குறிவைக்கும் தொல்லியல் திணைக்களம்!
யாழ்.காரைநகர் - வேரம்பிட்டி கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக கூறி அங்கு பார்வையிட சென்றிருந்த தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ள நிலையில் அமைச்சரின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்ட பொதுமக்கள் நீண்டநேரமாக காத்திருந்து அமைச்சர் வந்ததும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றனர்.
எனினும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் தொல்பொருள் எச்சங்கள் உள்ளதாக கூறப்படும் காணியை பார்வையிட்டுள்ளனர். இதன்போது குறித்த காணி தங்களுடையது என சுட்டிக்காட்டிய பொதுமக்கள், எதற்காக பார்வையிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது அந்த காணி லண்டனில் வசிக்கும் மருத்துவர் ஒருவருடையது எனவும் அந்த காணியில் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாக கூறி, ஆய்வு செய்யுமாறு 2012ம் ஆண்டு கூறியதாக தெரிவித்தனர்.
அதோடு அங்கு காணப்படும் கற்களை எடுத்துச் சென்று யாழ்.பல்கலைகழகத்தில் ஆய்வு செய்வோம். அல்லது மக்கள் அனுமதித்தால் இங்கேயே ஆய்வு செய்வோம் எனவும் கூறியுள்ளனர்.
எனினும் அந்த காணி தமது சொந்த காணி என கூறிய மக்கள் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதோடு அங்கு காணப்படும் கற்கள் வீடு கட்டுவதற்காக கொண்டுவரப்பட்டவை எனவும் கூறி பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், 2012ம் அண்டு மருத்துவர் கொடுத்த ஆவணத்துடன் வந்து மேல் நடவடிக்கை எடுப்போம் என கூறி அமைச்சர் பட்டாளம் அங்கிருந்து திரும்பி சென்றிருக்கின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் 10 பேருடைய காணியை தொல்லியல் திணைக்களம் அடிக்கடி வந்து பார்ப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.