யாழில் இரவோடு இரவாக அழிக்கப்பட்ட பகுதி; மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் அரச ஊழியர் ஒருவரால் JCB இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெருமளவான காடுகள் அழிப்பு
அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவண செய்துள்ளதாக தெரியவருகின்றது.
ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி JCB இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார் .
சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, காடழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த முற்பட்டவேளை குறித்த நபர் தொடர்ந்து அனுமதியின்றி காடுகளை அழித்துள்ளார்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவிக்கையில், குறித்த நபர் குத்தகைக்கு காணியை பெறுவதற்கு கடிதம் தந்துள்ளதாகவும், காடுகளை அழிப்பதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதோடு குறித்த பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் இருப்பதால் தம்மால் அனுமதி கொடுக்க முடியாதென்றும் அவ்வாறு அவர் காடுகளை அழித்திருந்தால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.