உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி
மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தொடர்பான ஏழு சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான செயற்பாடுகளில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களுக்கான பொதுச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.