ஜனாதிபதியின் யாழ் விஜயம் தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை ; புறக்கணிக்கப்பட்ட செம்மணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏமாற்றப்படும் தமிழர்கள்
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை என பொது ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றும் போது, செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் செம்மணி நோக்கி பயணம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கு செல்லாமல் அதனை கடந்து சென்றமை தமிழர் தரப்பை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு இனவாதம் குறித்து கதைத்திருந்தார். தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதம் குறித்து பேசி மக்களை திசைதிருப்ப முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இனவாதத்தை முற்றிலும் ஒழிக்க எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயார் என அவர் உறுதியளித்திருந்தார். இவ்வாறிருக்க, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள தமிழர்களின் படுகொலை நடந்த இடத்தில் ஜனாதிபதி இறங்காமல் சென்றது அவரின் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.