அமைதியான போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தும் அநுர அரசாங்கம் ; முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
நாட்டில் பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்த ஜே.வி.பி யினர் தற்போது ஆட்சிக்கு வந்தபின்னர் அமைதியான போராட்டங்கள்மீது தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்கள் மீது தாக்குதல்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் வேலையின்றி உள்ளனர். பல அரச பணியிடங்களில் இவர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் இவர்களுக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குமாறு வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனநாயக உரிமையை இன்றைய இளைஞர்கள் இழந்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுவினர் எதிர்க்கட்சியிலிருந்த போது போதியளவுக்கு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தாலும், ஆட்சிக்கு வந்தபின்னர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஜனநாயக உரிமையைக் கூட பறித்துள்ளனர்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.