அடுத்த இரு மாதங்களில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும்!
இலங்கையில் பொதுமக்களின் அறியாமையினால் அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மக்கள் மட்டுமல்லாது அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானித்ததாக செயற்குழு உறுப்பினரான வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார்.
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து, பாரிய ஒன்றுகூடல்கள் மற்றும் பிற நிகழ்வுகளை முன்னெடுப்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனினும், இலங்கையின் 60% க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவது வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் உருவாகி வருவதாகவும், எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.