உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர மற்றுமொரு ஏற்பாடு!(Photos)
உள்ளூர் மற்றும் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் "தியத்மா" ஓய்வு படகு சேவை நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தினால் இந்தப் பொழுதுபோக்கு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்போது கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய பொழுதுபோக்கு சேவைகள் உள் நீர்வழிகளில் படகு சேவை தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணியை அதிகரிக்க இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அவர்கள் நாட்டிலே தங்கியிருக்கும் காலத்தை அதிகரிப்பதற்கும் உரிய வேலைத்திட்டம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களின் பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற பயணிகள் படகு சேவைகள் மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த படகு 13 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதுடன் தியத்மா என்றும் பெயரிடப்பட்டது. இங்கு சுமார் 30 பேருக்கு வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கலந்துரையாடல்கள், மாநாடுகள், நட்பு சந்திப்புகள் போன்றவற்றை நடத்தும் திறனையும் இது கொண்டுள்ளது.
20,000 ரூபாய்
அதேவேளை இந்த முழு குளிரூட்டப்பட்ட படகில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 20,000 ரூபாய் ஆகும். மேலும் படகு சேவை தொடங்கி சில மணி நேரங்களில் இந்தப் படகை 9 பேர் முன்பதிவு செய்துள்ளதாக காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் கூறுகிறது.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே, காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், ரஜீவ் சூரியராச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.