காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது.
இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய உயர் ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
உயர் ஸ்தானிகரக தகவல்படி,
இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு (VGF) பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு, ஆண்டு தோறும் நிதி 300 மில்லியன் இந்திய ரூபாய்களுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயற்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், கப்பல் சேவையின் மலிவு மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை, இந்த நிதியளிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை 2024, ஓகஸ்டில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளை, குறித்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.