முன்னாள் இன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்ற நிகழ்வு
மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவிக்கு நேற்றையதினம் நிதியுதவி வழங்கப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் குறித்த தொகை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையளித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்த நிலையில் அதனை, அத்துகோரலவின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட "மாதிவெல மிதுரோ" கழகம் அத்துகோரலவுக்காக இந்நிதியை சேகரிக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை விசேட அம்சம் என்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.
கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதி சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அதேசமயம் இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தறை மாவட்ட முன்னாள் அமைச்சர் கீர்த்தி அபேவிக்ரம எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதனால் அத்துகோரளவின் குடும்பத்திற்கும் அவரது ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன, மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.