அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டத்துக்கமைய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415\66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் முதலாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள 'நிலையற்றவர்கள்' சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதியோருக்காக வழங்கப்படும் உதவித் தொகையை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பதற்கும் மற்றும் குறித்த தீர்மானங்களை ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.