பாராளுமன்ற உறுப்பினர்கள் 146 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 146 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது ஓகஸ்ட் 12 நிலவரப்படி தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு (RTI) அமைய தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 பாராளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் பெற்றுள்ளனர்.
இதேவேளை 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பாராளுமன்ற சுகாதார மையத்தின் ஊடாகப் பெற்றுள்ளனர். எங்களிடம் இதுவரை தடுப்பூசி போடாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதற்கான காரணம் இல்லை என தகவல் அதிகாரியும் பாராளுமன்ற உதவி பொதுச்செயலாளருமான டிக்கிரி கே.ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மொடெர்னா, பைஸர், சினோபார்ம் மற்றும் ஜப்பானின் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 14 நாட்களில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கமைய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரோஹன திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜனக்க திஸ்ஸகுட்டி ஆகியோரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.