வெடிகுண்டு் இருப்பதாக கதிகலங்க வைத்த விமானப் பயணி!
டெல்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென பயணி ஒருவர் தனது பேக்கில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து 185 பயணிகள் இருந்த அந்த ஆகாசா விமானம் உடனடியாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆகாசா விமானத்தில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
விமானம் தரையிறங்கிய நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அவரது பையைச் சோதனை செய்துள்ளனர். இருப்பினும், அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.
இருப்பினும், பாதுகாப்பு கருதி விமானம் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து அந்த குறிப்பிட்ட பயணியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து விமானம் நள்ளிரவு 12.42 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இருப்பினும், பாதுகாப்பு எச்சரிக்கை போலி என்று பின்னர் தெரிய வந்தது.
வெடிகுண்டு பயத்தைக் கிளப்பிய அந்த பயணியின் உறவினரும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அவர் நெஞ்சுவலிக்கு மருந்து சாப்பிட்டதாகவும், இதனால் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாகவும் அந்த உறவினர் போலீஸாரிடம் கூறினார்.
போலீஸார் விசாரணையில் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியான நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6 மணியளவில் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.