ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு
இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியா செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் AI171 விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில விநாடிகளில், மேகானி நகர் (Meghani Nagar) பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர், மேலும் தரையில் இருந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
40 வயதான விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்ற பிரித்தானிய-இந்தியர், 11A இருக்கையில் அமர்ந்திருந்தவர், அவசர வெளியேறும் வழியருகே இருந்ததால் உயிர் தப்பினார்.
விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் ஒரு உரத்த சத்தம் கேட்டு, பின்னர் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பியவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது போயிங் 787 ட்ரீம்லைனரின் முதல் விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.