ஏர் இந்தியா விமானத்தில் உணவில் தலைமுடி; பயணிக்கு இழப்பீடு
கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் தலை முடி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சுந்தர பரிபூரணம் என்ற பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அந்த உணவை வாங்கி சாப்பிட்ட போது அதில் தலை முடி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி சுந்தர பரிபூரணம், விமானத்தில் உள்ள ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.
பின்னர், முடி விழுந்த உணவை உட்கொண்டதன் காரணமாக அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் அவர் முறைப்பாடு செய்த போதும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து , சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் பயணி சுந்தர பரிபூரணம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி. பாலாஜி முன் நேற்று (17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் முடி இருந்ததை ஒத்துக் கொண்டது. சுகாதாரம் இல்லாமல் உணவு இருந்ததற்காக வருந்துவதாகவும், விமானத்தில் வழங்கப்பட்ட உணவு சென்னை அம்பாசிட்டர் பல்லவா ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவு என்றும், எனவே, அந்த நிறுவனத்தையும் வழக்கில் சேர்க்க வேண்டும், சுகாதாரமற்ற வகையில் உணவு இருந்ததற்கு விமான நிறுவனம் மட்டும் பொறுப்பில்லை என வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி , ஏர் இந்தியா விமான நிறுவனம் அலட்சியமாக இருந்துள்ளது தெளிவாகிறது. தனது பொறுப்பை உணவு நிறுவனத்திற்கு மாற்ற முயற்சித்துள்ளது.
எனவே, விமான நிறுவனத்தின் சேவையால் பாதிக்கப்பட்ட பயணி சுந்தர பரிபூரணத்துக்கு 35 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.