மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த? பசில் வெளியிட்ட தகவல்
பிரதமர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை. அவர் சுயவிருப்பின் பேரிலேயே பதவி விலகினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடமே பெரும்பான்மைப் பலம் தொடர்ந்தும் உள்ளது. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) சுயவிருப்பத்துக்கிணங்கவே புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டார்.
அதற்காக ரணிலின் நியமனத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் எதிர்ப்பு என்று அர்த்தம்கொள்ள முடியாது.
ஜனாதிபதி – பிரதமர் இணைந்து முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றகரமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு வழங்கும்” – என்றார்.