நாடாளுமன்றில் உயிர்த்த ஞாயிறு தொடர்பிலான விவாதம் ஒத்திவைப்பு;குஷானிரோஹணதீர தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை இம்மாதம் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் ( 08.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானிரோஹணதீர தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் (19.09.2023) ஆம் திகதி முதல் (22.09.2023) ஆம் திகதி வரை கூட்டப்படவுள்ளதுடன், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2334/47ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன எதிர்வரும் (19.09.2023) ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் (451 ஆம் அத்தியாயம்) வெளியிடப்பட்ட 2346/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி எதிர்வரும் (20.09.2023) ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அடுத்த அம்சமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான முழுநாள் விவாதம் எதிர்வரும் (21ஆம் மற்றும் 22 ஆம் ) திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடாத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.