ஹீரோயிசம் காட்டிய நடிகை பியுமி ஹன்சமாலியின் மகனுக்கு நேர்ந்த கதி!
பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியின் மகன் உட்பட அறுவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌஷல்ய புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.
ராஜகிரிய, கலப்பலுவாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில்,ஹன்சமாலியின் மகன் உள்ளிட்டோர் கைதாகி இருந்தனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன் , சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
வெலிக்கடை பொலிஸாரால் சந்தேக நபர்கள் அறுவரும் முகத்தை மூடிய நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, பியுமி ஹன்சமாலியின் மகனின் நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜகிரிய பகுதியில் பயணித்த போது முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பியுமி ஹன்சமாலியின் மகன் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு, முச்சக்கரவண்டி சாரதியை தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அவர் வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்குமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.