நடிகை ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் வழக்கு; இணையதளங்கள் மீது நடவடிக்கை
இந்திய பிரபல நடிகையும் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்கள், பெயர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சில இணையதளங்கள், ஐஸ்வர்யா ராயின் படங்களை திரித்து (மார்பிங் செய்து), ஆபாசமாகவும், சட்டவிரோதமாகவும் பயன்படுத்துவதாக வழக்கின் குற்றச்சாட்டு.
இணையதளங்கள் மீது நடவடிக்கை
மேலும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது உருவத்தை தவறாக சித்தரிப்பதாகவும் இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி, “ஐஸ்வர்யா ராய் பச்சன் உங்களுக்கு ஒரு சிறப்புப் பரிசு அளித்துள்ளார்” என போலியான செய்திகளை அனுப்பி, தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடிகள் நடப்பதாகவும், பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் வழக்கு கூறுகிறது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, ஐஸ்வர்யா ராயின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவரது புகைப்படங்கள், பெயர் மற்றும் AI படங்களை அனுமதியின்றி பயன்படுத்திய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவை இந்தத் தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை ஜனவரி 15, 2026-க்கு ஒத்திவைத்துள்ளது. அதேவேளை சமூக ஊடகங்கள் மீதான இந்த சட்ட நடவடிக்கை, இணையத்தில் பரவும் போலித் தகவல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.