யாழ் நகரில் சில வர்த்தக நிலையங்களில் இரகசியமாக அரங்கேறும் செயல் ; காத்திருக்கும் கடும் நடவடிக்கை
யாழ்ப்பாண நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் தரமற்ற பொலித்தின் பைகள், ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பொலித்தீன் என்பன இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் வடக்கு மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக உரிமங்களை இரத்துச் செய்ய உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாய நிபந்தனை
இதேவேளை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள புதிய சுற்றாடல் சட்டவரைவு நடைமுறைக்கு வந்ததும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, நல்லூர் பெருந்திருவிழா உள்ளிட்ட ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
யாழ். மாநகர சபை கடைகளுக்கான அனுமதியை வழங்கும்போது இதனை ஒரு கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.