திருகோணமலையில் நிலநடுக்கம் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!
திருகோணமலையில் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டைமான் மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (14-11-2023) நடைபெற்ற மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோத்தர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் சமீபக் காலமாக ஏற்பட்டு வருகின்ற நிலநடுக்கம் தொடர்பிலும் அதனை எதிர் கொள்ளக்கூடிய வகையில் மாணவர்கள் உட்பட ஏனைய தரப்பினரையும் தயார்ப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடாத்துமாறு கிழக்கு ஆளுநர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களினுடைய செயலாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சமீபக் காலமாக திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர். கிருபராஜா கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற நில நடுக்கம் தொடர்பாகவும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.