மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை; வர்த்தகர்களுக்கு பேரிடி!
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் மன்னார் நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மன்னார் நகர சபையிடம் உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சி படுத்தப்பட்டிருந்த மொபிடெல் நிறுவனம் உள்ளடங்களாக பல்வேறு நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள்
முன்னதாக இவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப் படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் உரிய அனுமதி யை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகள் மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை மன்னார் நகர சபை எல்லைக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபார வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.