நீதிமன்றத்தை அவமதிப்பு ; விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போதுஇ இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை விமர்சித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தகவல்களைச் சமர்ப்பித்தது.
முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் முதற்கட்ட அவதானிப்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டது.
அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.