நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலைத் தோட்டமொன்றைச் சொந்தமாக்கிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
'லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் காமந்த துஷார என்பவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் உரிய ஆவணச் சான்றுகளுடன் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குச் சமூகமளிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.