மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து; பலர் படுகாயம்
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து
இதன் போது பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதுடன், வீதியில் உந்துருளியில் நின்று கொண்டிருந்வர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது உந்துருளியில் நின்ற நபரும் காயமடைந்ததுடன், அவரது உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.