மன்னார் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கடல் பசு
மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர்.
எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என நூற்றுக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் வலையில் சமீப காலமாக கடல் பசு, டொல்பின் ஆகியவை சிக்குகிறது.
அதை உடனடியாக கடற்றொழிலாளர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (19) சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆபிரியா என அழைக்கப்படும் பெண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது.
இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆபிரியா என அழைக்கப்படும் பெண் கடல் பசு என்றும் அது சுமார் 300 கிலோ எடை கொண்டது என்றும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.