32 விதமான உருமாற்றம் அடையும் புதிய வகை கொரோனா! வெளியான பகீர் தகவல்
32 விதமான உருமாற்றம் அடையக்கூடிய பி.1.1.529 வகை கொரோனா வைரஸை லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அங்கு நாளொன்றுக்கு சுமார் 4,200 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.
இது கடந்த செப்டெம்பர் இறுதி நிலையை ஒப்பிடுகையில் இது இருமடங்கு ஆகும். இவ்வாறான நிலையில், புதிய வகையில் உருமாறுதல் அடைந்த கொரோனா வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புது வகை கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து முன்னேறக் கூடிய திறன் இந்த புது வகை வைரசுக்கு உள்ளதன் காரணமாக, அடுத்தடுத்த கொரோனா அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பி.1.1.529 வகை கொரோனா வைரஸ் 32 விதமான உருமாற்றங்களை அடையும் திறன் கொண்டதன் காரணமாக, மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் நோய்க்கிருமியைத் தாக்குவது கடினம் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் இதில் , சற்று ஆறுதலான விடயம் என்னவென்றால், இந்த புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ், முந்தைய வைரஸுகளை போல எளிதில் பரவாது என லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வைரஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டாக்டர் டாம் பீகாக் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் போட்ஸ்வானாவில் இம்மாதம் 11ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 3 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் ஆறு பேருக்கும், ஹாங்காங்கில் இருந்து தென் ஆப்பிரிக்கா சென்ற ஒருவருக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.