தூக்க கலக்கத்தால் பறிபோன உயிர்
புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (13) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை வீரர் சென்ற மோட்டார் சைக்கிள் புத்தளம் நோக்கி சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தம்பபண்ணி கடற்படை முகாமில் பணி புரியும் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குருணாகல், வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதான கே.எம் சந்தன பெரேரா என்கிற கடற்படை வீரர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த கடற்படை வீரர் நேற்றிரவு கடமையை முடித்துவிட்டு, இன்று அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது கடற்படை வீரருக்கு ஏற்பட்ட தூக்கத்தினால் கவனம் சிதறி, அவர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, விபத்தில் காயங்களுக்குள்ளான லொறியின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.