ஆசிரியர் பயிற்சிக் கலாசாரத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை மறுசீரமைக்கவும் கல்வி அமைச்சினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட புதிய தலைமுறை ஆசிரியர்களை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய குழுவிற்கு லியனகே அமரகீர்த்தி தலைமை தாங்குகிறார். நிறுவனக் கட்டமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் நலன்புரி சேவைகளை மதிப்பாய்வு செய்தல் போன்ற விடயங்களை இக்குழு ஆராயவுள்ளது.
மேலும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், கற்பித்தல் முறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்குதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு முறையான ஆசிரியர் பயிற்சி மிக அவசியமாகும்.
அந்த வகையில், ஆசிரியர் பயிற்சிக் கலாசாரத்தில் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு அங்கமாகவே இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் சர்வதேசத் தரத்திற்கு நிகரான திறன்மிக்க ஆசிரியர்களை உருவாக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.