தமிழர் பகுதியில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்; மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த பெரும் துயரம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை உயிரிழந்த சிவரஞ்சனா அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். அத்துடன் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்று பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொல்லப்பட்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.