நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு!
நுவரெலியா- நானுஓயா நகரில் நேற்றுமுன்தினம் (07.08.2023) காலை வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் காரணமாக முரண்பாட்டில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.
இம்முரண்பாடு வாக்குவாதமாக ஆரம்ப நிலையிலிருந்து உச்சநிலையை அடைந்து குறித்த வர்த்தகர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கருப்பையா இராமசுந்தரம் என்ற கத்திக்குத்துக்கிலக்காகிய வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று (09.08.2023) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் இருவரும் தாமாகவே நானுஓயா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.