மூட நம்பிக்கையால் நரபலி கொடுக்கப்பட்ட 10 வயது சிறுவன்!
மூட நம்பிக்கையால் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10). விவேக் கடந்த 23-ஆம் திகதி இரவு திடீரென காணாமல் போனான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் விவேக் கிடைக்கவில்லை.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுவன் விவேக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் பிணமாக கிடந்தான்.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையில் நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது 2½ வயது மகன் மனநலம் குன்றியவர் என்றும், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தையின் உடல்நிலை தேறவில்லை.
இதனால் அனூப் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மந்திரவாதியை அணுகிய நிலையில் சிறுவனை நரபலி கொடுத்தால் உனது குழந்தையின் உடல்நலம் தேறும் என தூண்டி உள்ளார். இதை நம்பிய அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.