இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 986 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளிகள்
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 53159 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் மாத்திரம் 18,227 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளதென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பு என சுகாதார பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.