இலங்கையில் உள்ள 84 ஈரானியர் உடலங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் பொறுப்பிலுள்ள 84 ஈரானியர் உடலங்களை ஈரான் கோரிக்கை விடுத்தால் ஒப்படைக்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் பதற்றமான சூழலில், நாடு ஒரு நடுநிலையான கொள்கையையே பின்பற்றுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையின் பொறுப்பில் 84 உடலங்கள் உள்ளதாகவும், ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவற்றை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் மற்றும் இரண்டாவது கப்பலில் இருந்து பொறுப்பேற்கப்பட்ட 206 கடற்படையினர் தற்போது இலங்கை கடற்படை மற்றும் மருத்துவமனைகளின் கண்காணிப்பில் உள்ளனர்.
சர்வதேச உடன்படிக்கைகளின்படி, அவர்கள் இலங்கையில் இருக்கும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பேற்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்