கேரளாவில் கோர விபத்து; தமிழ் நாட்டை உலுக்கிய சோகம்!
கேரளாவில் லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்து
அப்பகுதியில் வீதியோரம் சரக்கு லொறி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு சுமார் 11:40 மணியளவில் அந்த வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் வைத்தியக் கல்லூரி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்றும், குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்னிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.