இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை ; வெளியான பகீர் அறிக்கை
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில், 22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11.9% மாணவர்கள் கவலை காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனச்சோர்வு அறிகுறிகள்
அத்துடன் , 18% மாணவர்களுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் தென்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை எனவும் நாட்டில் தினசரி சுமார் 8 உயிர்மாய்ப்புகள் பதிவாகுவதாக தேசிய மனநல நிறுவனத்தின் வைத்தியர் சஜீவன அமரசிங்க கூறினார்.
அதேவேளை 1996இல் உலகளவில் உயிர்மாய்ப்புகளில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை, தற்போது ஒரு இலட்சத்திற்கு 15 உயிர்மாய்ப்புகளாகக் குறைந்துள்ளது.
ஆண்டுக்கு 3,500 உயிர்மாய்ப்புகள் நிகழ்ந்தாலும், ஊடகங்கள் இவற்றை பெரிதாக வெளியிடுவது குறைந்துள்ளமை ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.